search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் போலீஸ் சூப்பிரண்டு"

    பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #VishakaCommittee #NationalCommissionForWomen
    சென்னை:

    சென்னையில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தனது மேல் அதிகாரியான போலீஸ் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒரே துறையில் இருவரும் பணியாற்றிய போது வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்த பெண் அதிகாரியை வரவழைத்துள்ள போலீஸ் ஐ.ஜி. செல்போனில் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

    பெண் சூப்பிரண்டின் செல்போனுக்கும் ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் ஐ.ஜி. அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாடு முழுவதும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறையில் காலியாக இருந்த இந்த கமிட்டியில் புதிதாக உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.


    சீமா அகர்வால்

    கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் டி.ஜி.பி. அருணாச்சலம், போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி மற்றும் அதிகாரிகள் அதில் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டியின் முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த புகார் தொடர்பாக ஐ.ஜி. மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெண் அதிகாரியையும், ஐ.ஜி.யையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    விசாகா கமிட்டி தொடர்ந்து இந்த விவகாரம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

    இந்த நிலையில் பெண் அதிகாரியின் பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணைம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் பற்றி நாளிதழ்களில் வந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு தாமாகவே இந்த விசாரணையை நடத்த தேசிய மகளிர் ஆணையம் தீர்மானித்துள்ளது.

    இதுபற்றி மகளிர் ஆணைய நிர்வாகிகள் விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    குறிப்பிட்ட குற்றச்சாட்டு குறித்து மகளிர் ஆணையம் உடனடியாக புகாருக்குள்ளான நபருக்கு சம்மன் அனுப்ப முடியாது. ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூடி விவாதித்த பிறகே ஆணையம் உரிய முடிவை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்படி மகளிர் ஆணையத்தின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஆலோசனை நடத்தி போலீஸ் ஐ.ஜி.க்கு சம்மன் அனுப்பவும் மகளிர் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.

    பெண் சூப்பிரண்டின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரிடம் தகவல்களை திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. #VishakaCommittee #NationalCommissionForWomen
    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறியது தொடர்பாக விசாகா கமிட்டி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகாருக்குள்ளாகி இருக்கும் ஐ.ஜி. சென்னையில் துணை கமி‌ஷனராகவும், வெளிமாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர். போலீஸ் துறையில் நியாயமான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர். இதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

    காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் அரசு பெண் ஊழியர்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

    கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான இந்த கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


    இந்த கமிட்டியின் முதல் கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் கூடிய இந்த கூட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமை தாங்கினார். கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கூறி இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புகார் கூறி இருக்கும் பெண் அதிகாரிக்கும், புகாருக்குள்ளான போலீஸ் ஐ.ஜி.க்கும் விரைவில் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விசாகா கமிட்டியின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தபடுபவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

    இதன் மூலம் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண் போலீஸ் அதிகாரி மீதான பாலியல் புகார் பற்றி உரிய முறையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே ஐ.ஜி. மீதான பாலியல் விவகாரத்தில் விசாகா கமிட்டி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் விரைவில் மீண்டும் விசாகா கமிட்டி கூட உள்ளது. அப்போது முதலில் பெண் போலீஸ் சூப்பிரண்டை வரவழைத்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.ஜி.யிடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    போலீஸ் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு செக்ஸ் புகார் அளித்துள்ளதால் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    தமிழக காவல் துறையில் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது உயர் ஆண் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த ஐ.ஜி. எந்தெந்த வகைகளில் எல்லாம் பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தமிழக காவல் துறைக்கு கரும் புள்ளியாக மாறியுள்ள இந்த பாலியல் துன்புறுத்தல் முயற்சி பற்றிய முழு விபரம் வருமாறு:-

    தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளில் சூப்பிரண்டு அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் சென்னையில் முக்கிய பிரிவு ஒன்றில் துணை கமி‌ஷனராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு உயர் அதிகாரியாக ஐ.ஜி. அந்தஸ்தில் ஆண் போலீஸ் அதிகாரி இருக்கிறார். ஒரே பிரிவில் இருப்பதால் அந்த ஐ.ஜி. அடிக்கடி பெண் போலீஸ் துணை சூப்பிரண்டை அழைத்து வழக்குகள் தொடர்பாக பேசுவதுண்டு.

    நாளடைவில் அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு மீது ஐ.ஜி.க்கு ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பெண் போலீஸ் சூப்பிரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதோடு ஐ.ஜி.யின் விருப்பத்தை நிராகரித்துள்ளார்.

    என்றாலும் ஐ.ஜி. தனது மனதை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் ரீதியிலான முயற்சிகளை கையாண்டதாக தெரிகிறது. பல தடவை பாராட்டுவதாக கூறி அவர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தாராம்.

    அதுபோல வழக்குகள் தொடர்பாக இருவரும் விவாதிக்கும்போது அந்த ஐ.ஜி. தனது செல்போனில் பதிவாகி உள்ள தகவல்களை காண்பித்து பேசுவாராம். அந்த தகவல்களை அவர் பெண் போலீஸ் சூப்பிரண்டின் செல்போனுக்கு பரிமாற்றம் செய்வதுண்டு. அந்த சமயத்தில் அவர் ஆட்சேபத்துக்குரிய படங்களையும் சேர்த்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக அதிகாலை நேரத்தில் அந்த அதிகாரி மோசமான படங்களை அனுப்பியதாக தெரிகிறது.

    ஒரு தடவை ஒரு வழக்கு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பெண் சூப்பிரண்டை அவர் தனது அறைக்கு அழைத்திருந்தாராம். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டினாராம்.

    இதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி ஐ.ஜி. தொடர்ந்து ஆபாச படத்தை காட்டியதாக கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு அடி பணியாததால் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஐ.ஜி. இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த பெண் அதிகாரியிடம், “உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கை (ஏ.சி.ஆர்.)யில் உனக்கு எதிராக குறிப்புகளை எழுதுவேன்” என்று ஐ.ஜி. அச்சுறுத்தும் வகையில் மிரட்டினாராம்.

    இதனால் என்ன செய்வது என்று தவித்த அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு வேறு பிரிவுக்கு மாற்றலாகி சென்று விடலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உடனடி இடமாற்றம் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலும் அந்த ஐ.ஜி. ஒருநாள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் முயற்சியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இனியும் பொறுமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார். அதோடு தனது பிரிவு உயர் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் ரீதியிலான துன்புறுத்தல் கொடுக்க முயன்றார் என்ற புகாரையும் அளித்தார்.

    அப்போது ஐ.ஜி. எந்தெந்த வகையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்றும் டி.ஜி.பி.யிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு விளக்கமாக எடுத்துக் கூறினார். வழக்குகள் தொடர்பாக பேசிய போது ஆபாச படம் காட்டப்பட்டதையும் கூறினார்.

    மேலும் ஐ.ஜி. தனது செல்போனில் இருந்து அனுப்பிய ஆபாச படங்களையும் பெண் அதிகாரி ஆதாரத்துடன் காட்டி முறையிட்டார்.

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆதாரத்துடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கண்டு டி.ஜி.பி. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க விசாகா கமிட்டி உள்ளது. தமிழக காவல் துறையில் விசாகா கமிட்டி உறுப்பினர்கள் ஓய்வு பெற்று விட்டதால், அந்த கமிட்டி செயல்படாமல் இருந்தது. தற்போது இந்த கமிட்டிக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான அந்த விசாகா கமிட்டி கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் ஆகியோர் உள்ளனர். இந்த கமிட்டி ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கும். விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்று காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு புதிய விதிமுறைகளை இயற்றியுள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    விசாகா கமிட்டி விதிகளின்படி, குற்றம் இருப்பதாக தெரிய வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பிரிவுகளின் கீழும் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

    இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஜி. மீதான புகார் காவல்துறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடமை தவறாத அந்த ஐ.ஜி. சென்னை காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். நல்ல அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.

    சென்னையில் துணை போலீஸ் கமி‌ஷனராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். வெளி மாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது பதவி உயர்வு பெற்று ஐ.ஜி.யாக உள்ளார்.

    அவர் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகார்கள் ஆச்சரியம் அளிப்பதாக சொல்கிறார்கள். #Vishakacommittee

    ×